முத்தமிழ் விழா 2018

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும், தமிழ்மக்களும் இணைந்து  முத்தமிழ் விழாவை 30.09.2018 ஞாயிறு பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், சுவிஸ் நாட்டுப் பிரமுகர்கள், தமிழ்ப்பள்ளிகளின் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், தமிழாசிரியர்கள், கலையாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள்  என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

 

நிகழ்வின் சிறப்பாக முத்தமிழ் விழா மலரும், அனைத்துலகத்  தமிழ்க்கலை நிறுவகத்தின் மதிப்பளிப்பு மலரும்,  தமிழ்க் கல்விச்சேவையால் தொகுத்து ஆக்கப்பெற்ற குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கிய இறுவெட்டும்   வெளியிட்டு வைக்கப்பெற்றன.

 

இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்   தொலைதூரக்கல்விவழி  பட்டப்படிப்பை, பட்டமேற்படிப்பை  நிறைவு செய்தவர்களுக்கான பட்டமளிப்பும், 2017/18 கல்வியாண்டிலே  தமிழ்மொழிக்கல்வியில்  ஆண்டு 12 நிறைவுசெய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் சிறப்பு நிகழ்வுகளாக நடைபெற்றன. அத்துடன்  2017/18 கல்வியாண்டில் தமிழ்மொழியில் 10 ஆம் ஆண்டில் சித்திபெற்ற மாணவர்களும் 25 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 10 ஆண்டுகள் சேவை நிறைவு செய்த மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்களும் மதிப்பளிக்கப் பெற்றனர்.

 

அனைத்துலகத்  தமிழ்க்கலை நிறுவகத்துடன் இணைந்து  25 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 10 ஆண்டுகள் கலைப்பணியாற்றிய கலையாசிரியர்களும் 2013, 2014, 2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் நுண்கலைகளான வாய்ப்பாட்டு, நடனம், வயலின், வீணை ஆகியவற்றில் ஆற்றுகைத் தரம் வரை சித்திபெற்ற மாணவர்களும்  மதிப்பளிக்கப்பெற்றனர். அத்தோடு அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள்     அமரர் பேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவு விருது வழங்கி சிறப்பிக்கப்பெற்றனர்.

 

கல்விச்சேவையால் நடாத்தப்பெர்ற ஓவியப்போட்டி 2018  இல் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு அவர்கள் போட்டியிலே வரைந்த ஓவியத்தின் பிரதியும்  சான்றிதழும் பரிசாக வழங்கப்பெற்றது. அத்துடன் வெற்றிபெற்றவர்களின்  ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பெற்றன.

 

இசை, நடனம், நாட்டுக்கூத்து என முத்தமிழ் சார்ந்த நிகழ்வுகளோடு  தமிழர்களின் பாரம்பரிய உணவுகளும், தாயகத்திலிருந்து வருவிக்கப்பெற்ற பனம்பொருட்களும் முத்தமிழ் விழாவில் தமிழர் பண்பாட்டை விளம்பிநின்றன. வண்ணம் தீட்டுதல், தமிழ்மொழி சார்ந்த போட்டிகள் போன்ற சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பெற்றிருந்தன.

 

பெரியவர்கள், இளையவர்கள் என அனைவரதும் ஒருமித்த உழைப்பின் அறுவடையாக சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் விழா 2018,  எமது மொழி, கலை, பண்பாடு என்பவை அடுத்த தலைமுறையினரிடம் பக்குவமாகக் கடத்தப்படுகின்ற செய்தியையும், தொடர்ந்தும் ஆண்டு தோறும் இளையவர்கள் இவ்விழாவைச் சிறப்பாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கையையும் சுட்டி நின்றது.

https://www.facebook.com/tamilschool.ch/videos/274438459869355/

https://www.facebook.com/pg/tamilschool.ch/photos/?tab=album&album_id=1739427706169513